Wednesday, April 1, 2009

மனம் கவர்ந்த ஓவியர்கள்

ஒருவர் கையெழுத்தை வைத்து இன்னார் எழுதினார் என்று கண்டுபிடிக்கிறது ஓரளவுக்கு சுலபம் தான். சில நேரங்களில், இது அச்சு அசல் அவரோட கையெழுத்து மாதிரியே இருக்கே என்று நம் நண்பர்கள் சொல்லிக் கேள்விப் படுகிறோம், அல்லது நாமே பார்க்கிறோம். ஆனால் ஓவிய‌த்தைப் பொருத்த‌வ‌ரையில், இவர் அவ‌ர் மாதிரியே வ‌ரைகிறார் என்று இது வ‌ரை நாம் கேள்விப்பட்டதில்லை.

ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்று த‌னி ஸ்டைல் வ‌குத்துக் கொண்டார்க‌ள். எப்ப‌டி இந்த‌ மாதிரி ஒரு நிலை ஏற்ப‌டுத்திக் கொண்டார்க‌ள் என்று ப‌ல‌ நாள் விய‌ந்திருக்கிறேன். கையெழுத்துப் போடுவ‌து கூட‌ ஒரு க‌லை தான். சில‌ர் கையெழுத்து அட்ட‌காச‌மா இருக்கும். ரூம் போட்டு, ப்ராக்டிஸ் ப‌ண்ணிருப்பார்க‌ளோ என்று கூட எண்ண‌த் தோன்றும். அதே போல‌ ஓவிய‌ர்க‌ளும் சில‌ ப‌யிற்சிக‌ள் மேற்கொண்டிருக்க‌லாம், வித‌ வித‌மா வ‌ரைந்து பார்த்து, ஒரு க‌ட்ட‌த்தில் திருப்தி ஏற்ப‌டுகையில், அதையே base style ஆக‌ ஆக்கியிருக்க‌லாம் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.

அந்த கால கட்டத்தில, ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பதுகளில் இருந்து இன்றுவரை கொடிகட்டிப் பறந்த / பறக்கும் ஓவியர்களைப் பற்றி:

ஓவியர் ஜெயராஜ், 'ஜெ...' என்று மூன்று புள்ளிக‌ள் வைத்து ஆர‌ம்பித்தார் என்று நினைவு. எல்லோரும் கையெழுத்து போடும் போது, அப்ப‌டி ஒரு கோடு போட்டு, கீழே ரெண்டு புள்ளி வைப்பார்க‌ள். அது போல‌த் தான் இவ‌ர் மூன்று புள்ளிக‌ள் வைக்கிறார் என்று எண்ணினேன். பின் ஒரு பேட்டியில், அவ‌ரே சொல்லியிருந்தார், அது அவ‌ர் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ளின் எண்ணிக்கை என்று. சிம்ப்ளி சூப்ப‌ர். அப்புற‌ம் குடும்ப‌ம் பெரிதாக‌ ஆக‌ புள்ளிக‌ள் கூடிக் கொண்டே சென்ற‌தைப் பார்த்தேன். 'ஜெ'வின் ஓவியங்கள் அருமையான உருவங்கள் மற்றும் அதன் shades கொண்டு நம் கண்களைக் கவரும். செக்ஸியா வரையறதிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை அப்போது. சில strokes தான், படம் அப்படி ஒரு attractive-ஆ இருக்கும்.




உருவங்களுக்கு எந்த அளவிற்கு ஜெ முக்கியத்துவம் கொடுத்தாரோ, அந்த அளவிற்கு முகபாவத்திற்கு முக்கியத்துவம் தந்தவர் ஓவியர் மாருதி. சீற்றம், நாணம், அமைதி, வேகம், என்று இப்படி எந்த ஒரு ஓவியத்தை எடுத்தாலும், முதலில் நம்மைக் கவருவது அந்த முக பாவங்கள். அத்தனை தத்ரூபமாக வரைந்திருப்பார். வண்ணக் கலவையும் bold-ஆ இருக்கும்.




கார்ட்டூன்களில் ஓவியர் மதன் இன்றும் உயரத்தில் இருப்பதை நாம் யாரும் மறுக்க முடியாது. ஏழை விவசாயி ஆகட்டும், வாழும் பெரும்புள்ளி ஆகட்டும், அவரது கார்ட்டூன் பார்க்கும் போதே நம்மில் ஒரு சிறு புன்முறுவலாவது உதிர்வது உறுதி. ஓவியத்தையும் தாண்டி வரலாற்று படைப்புக்கள், கேள்வி பதில் என்று மேலும் தன்னை மெறுகேற்றிக் கொண்டவர்.




ஆரம்ப காலங்களில் ம‌.செ. அவர்களின் ஓவியங்கள் அந்த அளவிற்கு சிறப்புடையதாய் இல்லை என்றே சொல்ல வேண்டும். கல்கியின் பல காவியங்களுக்கு ஓவியம் தீட்டிய மணியம் அவர்களின் புதல்வர். நாள் செல்லச் செல்ல ம.செ.வின் ஓவியத்தில் அப்படி ஒரு perfection. அதற்கப்புறம் தன் ஓவியங்களில் பல‌ அற்புதங்கள் படைத்தவர். சாந்தம், நளினம், இறையவர்கள் என்று உருவங்களிலும் மற்றும் வண்ணக் கலவையிலும் மெலோடியான ஓவியர். இவரது ஒரு கிருஷ்ணர் ஓவியம் பார்த்து, வரைந்து இத்தளத்தில் பதிந்திருக்கிறேன்.




கார்ட்டூனிஸ்ட் சித்தார்த் அவர்களின் பல கார்ட்டூன்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன், பின் வரைந்திருக்கிறேன். கார்ட்டூன் என்று கண்டபடி கோடுகள் போடாமல் அற்புதமாக‌ வரையும் ஓவியர். 'சிம்பிள் தான் சூப்பர்' என்று இவரது கார்ட்டூன்களைப் பார்க்கும் போது நமக்குப் புரியும். சிம்பிளான கார்ட்டூன்களிலும் கூட சிறு சிறு செய்திகளையும் சேர்த்து ஒரு நேர்த்தியாகப் படைப்பதில் வல்லவர். இவரோட இன்ஸ்பிரேஷனில் வரைந்த படங்கள் சிலவற்றை இத்தளத்தில் பதிந்திருக்கிறேன்.




Abstract ஓவியங்களைப் பார்க்கையில் Modern Art அவ்வளவாகப் பிடிப்பதில்லை. நம் இஷ்டத்திற்கு ஒன்று வரைந்து, பிறருக்குப் புரியாத காரணத்தால் அதற்கு நேர் மாறாய் நிறைய விளக்கங்களும் தரலாம் என்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் மருது அவர்களின் கோட்டோவியங்கள் சில நேரம் நின்று பார்க்க வைக்கும். பென்சில் கொண்டு அவ்வளவு நேர்த்தியா கோடு போடுவதே கடினம். இவர் என்னடா என்றால் ப்ரஷ் கொண்டு விளாசி அற்புதமாய்க் கோட்டோவியம் போடுகிறார் என்று வியந்தது உண்டு.



ஓவியர் அர்ஸ் படங்களும் ஆரம்பத்தில் அத்தனை ஈர்ப்புடையதாய் இல்லை. போகப் போக பல வித்தியாசங்கள் காண்பித்தவர். தொடர்கதைளில் கூட வித்தியாசமாகப் படம் வரைந்தவர். அதாவது ஒரு படத்தைப் பார்த்தால், அது இந்தத் தொடருக்கு வரைந்தது என்று கூறலாம். உருவங்கள், வண்ணங்கள் என்றில்லாமல், texture-லும் வித்தியாசம் காண்பித்தவர்.



சிறு வயதில் வாரப் பத்திரிகை என்று படித்தால் அது கல்கண்டு தான். அப்பா தான் படிக்கத் தூண்டினார். நிறைய தகவல்கள் அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்று. நமக்குப் பிடிச்சதோ அதில் வரும் தொடர்கதை. எழுதியவர் தமிழ்வாணனா அல்லது அவர் புதல்வர் லேனாவா என்று நினைவில் இல்லை. அதற்குப் படங்கள் வரைந்தவர் ஓவியர் ராமு. குடும்பப் படங்கள் என்றால் நினைவில் வருபவர். கதாபாத்திரங்கள் நம் மனதில் அழுத்தமாக பதியுமாறு இருப்பதற்கு இவரின் ஓவியமும் ஒரு காரணமாக இருக்கும்.



இவர்கள் அனைவரையும் பற்றி சுருக்கமாக‌ச் சொல்ல வேண்டுமெனில்:

ஜெ - Soft & Sexy
மாருதி - Aggresive
மதன் - Captive Cartoons
ம.செ. - Mild & Sweet
சித்தார்த் - Creative Cartoons
மருது - Line dance
அர்ஸ் - Tender
ராமு - Old is Gold

இன்னும் பலர் இருக்கலாம். ஓவியர்கள் என்றவுடன் சட்டென்று மனதில் தோன்றியவர்களைப் பற்றி எனது எண்ணத்தை எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்த/தெரிந்த ஓவியர்களைப் பற்றி பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Sunday, February 15, 2009

காளான்கள் - Water color



வழக்கம் போல கைநிறைய புத்தகங்கள் எடுத்து வந்தேன் நூலகத்தில் இருந்து. நல்ல படமா இருக்கணும், வரையறதுக்கும் எளிதா இருக்கணும் என்ற கோணத்திலேயே, எதை வரையலாம் என அத்தனை புத்தகங்களையும் (படம்) பார்த்தேன். இந்த காளான்கள் சட்டென மனதை எட்டிப் பிடித்தன. நினைத்த மாதிரி எளிமையாவும் இருக்க, வரைய அமர்ந்தேன்.

6"x2" கட்டம் கட்டி ஒரு பென்சில் ஸ்கெட்ச். கட்டங்கள் அகற்றி முதலில் ஒரு மெல்லிய செபியா வாஷ் (Brown கலர்). அது காய்ந்தவுடன், அதை விட கொஞ்சம் அடர்த்தியான வாஷ். மூன்றாவது ஆங்காங்கே இருக்கும் மிக அடர்த்தியான Brown மற்றும் Black கலவை. நினைத்த அளவு ஈஸியா இல்லை. இரண்டு மணி நேரங்கள் ஒரே சிந்தனை என கட்டிப் போட்டது காளான்கள் :))

Sunday, February 8, 2009

எங்க வீட்டு குட்டி தேவதை - Charcoal & Pencil



பொதுவா புகைப்படங்கள் பார்த்து வரைந்து பழக்கம் இல்லை. ரொம்ப நாள் முயற்சி செய்யணும் என்ற எண்ணம் காற்றில் கரைந்த வண்ணம் இருந்தது. கரைய விட்டிருவோமா என்ன ?! குசேலனுக்கு அப்புறம், எங்க வீட்டு குட்டி தேவதையின் படம். சக்கி‍சீஸஸில் எடுத்தது. வரைபடம் போலவே இருந்த (இப்ப புரிஞ்சிருக்குமே சூட்சுமம் :))) அந்தப் படம் என்னை வெகுவாக ஈர்த்தது.

வழக்கம் போல கட்டம் கட்டி (5" x 4") 2b பென்சில் அவுட்லைன். பிறகு கட்டமெல்லாம் அகற்றி, சார்கோலில் தலைமுடி. அப்புறம் 2b பென்சிலில் ஷேட்ஸ். பேப்பர் கொண்டு ஷேட்ஸ் நல்லா ப்லென்ட் பண்ண, ஓரளவுக்கு எங்க வீட்டு குட்டி தேவதை போல (90% என்று சொல்லலாம்) வ‌ந்தது படம். எல்லாம் ஒரு மூன்று மணிநேரங்கள் ஆனது.

படத்தை முடித்து, அவங்க கிட்ட ஆவலா காட்டினா, அவங்களுக்கு அந்த அளவிற்கு நிறைவு இல்லை :((

Monday, January 26, 2009

அரசியல் தலைவர்கள் - Caricature

தொன்னூற்றி ஐந்தில், ஆ.வி.யில் உதயன் அவர்களின் கைவண்ணத்தில் வந்த கேரிகேச்சர் ஓவியங்கள். பார்க்கறதுக்கு எளிதாக இருந்தாலும், ஒரு சில வரிகளிலேயே, இன்னார் என்று சொல்லும் அளவிற்கு வரைவது, கேரிகேச்சர் ஓவியங்களின் சிறப்பு எனச் சொல்லலாம்.

உதயன் அவர்களின் ஓவியங்களைப் பார்த்து, பிரமித்து, நான் வரைந்திருக்கிறேன் !!! அப்படியே, எப்படி இருக்குனு 'ஒரு வரி' சொல்லிட்டுப் போங்க ;))









Sunday, January 18, 2009

போகீமான் - Clay



நாம சாக்பீஸ்ல கொட கொடனு கொடயறத பார்த்துட்டு, எங்க வீட்டு குட்டீஸுக்கும் பயங்கர ஆசை. சரி பண்ணுங்கடா பசங்களானு விட்டால், லேசா மூனு மூலையில் கீறிவிட்டு, நட்டக்குத்தா நிக்க வச்சிட்டான் பையன். என்னாடா அதுனு கேட்டால், "ராக்கெட்" என்று பதில் வருகிறது :)))

போன வாரம் ஒரு நாள் "ஹாபி லாபி" போய் நமக்கு ஷாப்பிங் செய்தால், பசங்க அதுங்க பங்குக்கு ஒரு மினி ஷாப்பிங். அவங்க வாங்கியது கலர் கலரா களிமண் !!!

வெள்ளிக் கிழமை ஆரம்பிச்சாங்க. யானை, குதிரை, பூக்கள், பட்டாம்பூச்சி என போய், கடைசியில் அவங்க ஆஸ்தான போக்கீமானில் வந்து நிக்கறாங்க. சிவா தான் எல்லாம், தீக்ஷா அப்பப்ப அண்ணனைப் பார்த்து அதே போல செய்ய முயற்சி செய்வாள்.

வரிசையா செஞ்சு டி.வி. ரேக் மேல அடுக்கிட்டாங்க. அதிலிருந்து மூன்று சிற்பங்கள் உங்கள் பார்வைக்கு. பேர் எல்லாம் நமக்கு வாய்க்குள்ளயே வரமாட்டேன்கிறது. படத்தில இருக்கவங்க டியால்கா, மெகினீயம், க்ரோவைல்.

The Thinker - Water color



அகெஸ்டே ராடின் அவர்களின் உலகப் புகழ்பெற்ற இந்தச் சிலையைப் பார்க்கும் போதெல்லாம், நாமும் என்னத்த சாத்தித்துவிட்டோம் என்று சிந்தனை ஊற்றெடுக்கும். கற்றது கைமண்ணளவே, இன்னும் மேலே போ என்பது போல நம்மையும் சிந்திக்க வைக்கும் இச் சிலையை வரைந்தது 92ல்.

One Color, different tones முயற்சி செய்ததும் சற்று வித்தியாசமாக இருந்தது. நீரின் அளவை வர்ணத்தில் எவ்வளவு சேர்த்தால், லைட் கலரில் இருந்து டார்க் கலர் கிடைக்கிறது என கற்றுக் கொள்ளவும் முடிந்தது.

Free hand drawing மாதிரி, Free brush drawing என்று சொல்லலாம் இப்படத்தை :))

Monday, January 12, 2009

வெண் இதய அன்னங்கள் - Chalkpiece carving



வித்தியாசமா ஏதாவது செய்யனும் என்று யோசித்ததில், எப்போதோ எங்கோ பார்த்த இரு பளிங்கு அன்னங்கள் நினைவிற்கு வந்தன. இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டிருப்பது போல இருக்கும். அதன் நீண்டு வளைந்த கழுத்துக்கள் அப்படியே இதய வடிவில் ... இது தான் நம்ம சப்ஜெக்ட் இந்த சாக்பீஸ் கார்விங்கிற்கு.

எளிதாக எண்ணத்தில் தோன்றினாலும், செதுக்கிட்டே வரும்போது கழுத்து உடைந்துவிடும். இரண்டு மூன்று முறை தோற்று, பின்னர் பிறந்தன அன்னங்கள். இன்னும் டீடெய்ல் சேர்க்கலாம், உடைந்துவிடுமோ என பயம் :((

சென்ற பதிவில், செய்முறை விளக்கம் தந்தால் நன்றாக இருக்குமே என்றார் நானானிம்மா. இந்தப் பீஸும் முன்னரே செய்து விட்டதால், ஸ்டேஜ் பை ஸ்டேஜ் படம் எடுக்க முடியவில்லை.

இப்ப சிறு விளக்கம் பார்க்கலாம்: முதலில் சாக்பீஸை செவ்வகமாக செதுக்கிக் கொள்ளனும்.
இருபுறமும் சரி பாதி அளவிற்கு செதுக்கி .... செதுக்கி .... ம்.ஹிம். எழுத்தில் கொண்டு வரமுடியல ... அடுத்த கார்விங்கிற்கு படங்கள் நிச்சயம் :)))

Tuesday, January 6, 2009

சாக்பீஸ் ச்செய்ன் - Chalkpiece carving



எல்லோரும் பத்தாவது படிக்கும்போது கொஞ்சம் சீரியஸா ஆகிடுவாங்க. கல்வியின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் வகுப்பு அல்லவா ?!!! ஆனால், நானும் என் நண்பன் ஒருவனும் (வழக்கம் போல கடைசி பெஞ்ச் :)) ரொம்ப தீவிரமா சாக்பீஸ் கார்விங்கில் இறங்கி விடுவோம். கார்கள் தான் எங்க ஃபேவரிட். குட்டிக் குட்டியா அழகா வெண் கார்கள், ரெடி ஆக ஆக, மற்ற நண்பர்களுக்கு சப்ளை ஆகும். நம்ம கையில் எதுவும் நிற்காது.

வந்த உடனேயே, "யாராவது போய் ஆபீஸ் ரூமில் இருந்து சாக்பீஸ் வாங்கிட்டு வாங்க" என்பது சில ஆசிரியர்களின் வழக்கம் எங்கள் பள்ளியில். உங்கள் பள்ளியிலும் இருக்கலாம் !!! யாராவது முன் பெஞ்சில் இருந்து எழுந்தா கூட, "நீங்க உட்காருங்க, இந்தாப்பா கடைசி பெஞ்சு, யாராவது போங்க" என்று சொல்லுவார்கள்.

ஒரு சாக்பீஸ் வைத்துக் கொண்டு மற்றவற்றை ஆசிரியரிடம் நீட்டுவோம். முதலில் டெஸ்கில் வரைய பயன்படுத்திய சாக்பீஸ், திடீரென்று ஒருநாள் காராக மாறியது. ஜாமெட்ரி பாக்ஸ் தான் ஆஸ்தான டூல் பாக்ஸ். முதலில் ஷேப் மட்டுமே செய்த கார்கள், நாளடைவில் ஜன்னல் எல்லாம் குடைந்து நன்றாக வர ஆரம்பித்தது. வேறு எதுவும் உருவ‌ங்க‌ள் செய்த‌மாதிரி ஞாப‌க‌ம் இல்லை.

அந்த‌ விடுமுறை நாளில், ஊருக்குச் செல்கையில் ஒரு பாக்ஸ் சாக்பீஸ் வாங்கி சென்றேன். பிள்ளையார், க‌ணிணி, ம‌ண்ட‌ப‌ம், ஷோஃபா, டேபில், ஸ்டூல், செயின் இப்ப‌டி நிறைய‌ தோன்றிய‌தை எல்லாம் செய்ய‌ முடிந்த‌து.

இந்த முறை இந்தியா சென்ற போது, அவற்றை எல்லாம் எடுத்து வரலாம் எனப் பார்த்தால், அவ்வளவு டெலிகேட்டா இருந்தது. அதனால் ஊரில் பத்திரமாக வைத்து விட்டு, இங்கு வந்து புதிதாய் செய்யலாம் என எண்ணினேன்.

இங்க 'சைட்வாக் சாக்' என்று கொஞ்ச பெரிய சைஸில் சாக்பீஸ் கிடைத்தது. சில சிற்பங்கள் செதுக்க, எதிர்பார்த்த அளவிற்கு, சுமாராகவே வந்தன அவை.

அவற்றிலிருந்து "சாக்பீஸ் ச்செய்ன்" உங்கள் பார்வைக்கு. முன்னெல்லாம் ஒரே நாளில் செய்ய முடிந்தது. இப்பொழுது சம்சாரி ஆகி, குடும்பமும் பெரிதாக :))) நேரம் அதிகம் கிடைப்பதில்லை. அதனால் இதை சுமார் இரண்டு மணி நேரங்கள் ஒரு நாளைக்கு எடுத்து, மூன்று நாட்கள் ஆனது நிறைவு செய்ய.

Sunday, January 4, 2009

கவாஸ்கர், ரவி சாஸ்த்ரி, கபில் தேவ் இவர்களுடன் K.J.யேசுதாஸ்

இந்த முறை இந்தியா சென்று திரும்புகையில் நிறைய புத்தகங்கள் எடுத்து வரணும் என்று நினைத்தேன். அது முடியவில்லை. புகைப்படங்கள் கூட எடுத்துவரமுடியவில்லை.

அப்பொழுது எனது ஷெல்ஃப் தோண்டுகையில், அதில் அந்த காலகட்டத்தில் வரைந்த படங்கள் சில ஒட்டி வைத்திருந்தேன். செல் அரித்து, அது கூட ஒரு கலை நயம் போல் காட்சி தந்தது. அப்படியே டிஜிட்டலில் க்ளிக்கிக் கொண்டேன்.

என்பது, தொன்னூறுகளின் கிரிக்கெட் நாயகர்கள் கவாஸ்கர், ரவி சாஸ்த்ரி, கபில் தேவ் மற்றும் பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள். அந்தப் படம் இங்கே உங்கள் பார்வைக்கு. படத்தைக் க்ளிக்கி பெரிதாக்கி பாருங்கள்.

Saturday, January 3, 2009

வீடு - Pencil Sketch




தொன்னூற்றி நாலில், தமிழக வீடுகள் என்று குமுதத்தில் வந்த படம் என்று நினைக்கிறேன். முழுக்க பென்சில் தான். 2b பெசில் கொண்டு, அதைப் பார்த்து வரைந்த படம். ஷேட் வேண்டும் என்கிற இடத்தில், திக்கா போட்டு, பிறகு பேப்பர் வைத்து ஸ்மட்ஜ் செய்தேன். இப்பத் தானே பல எண்களில் பென்சிலும் கிடைக்கிறது :))

கிராமத்தில் எங்க வீடும் இதே போன்று தான் இருக்கும். நீண்டு அகன்ற தூண்கள் (எல்லாம் பர்மா தேக்கு), இறங்கிய தாழ்வாரம். முற்றத்தில் விழும் சூரிய வெளிச்சம் ... இப்படி எல்லாம் இப்படத்தில் இருக்க, அதுவே வரையவும் தூண்டியது.

அப்படியே எப்படி இருக்குனு ஒருவரி சொல்லிட்டுப் போங்க :))